இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக நிதி குற்றம் தொடர்பாக ஆபத்து இனங்காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
லண்டன் நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு இணைவாக இடம்பெற்ற நிதி சார் ஒழுங்கு விதிகள் பற்றிய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.
அந்தக் காலத்தில் அதற்குத் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, தற்போதும் நிதிசார் குற்றங்களைத் தவிர்க்கும் நோக்கில் அமுலில் உள்ள சட்டதிட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
லண்டன் மென்ஷன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. கடந்த சில வருடங்களில் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தன. இந்த நிலைமை சர்வதேச நிதி நடவடிக்கைகளில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இது அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இவ்வாறான மறைமுக விளைவுகள் வளர்முக நாடுகளின் வங்கி நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். உலக நிதி வலயமைப்பின் மூலம் வங்கிகளின் செயற்பாடு சீர்குலையும் ஆபத்து இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது இலங்கை போன்ற நாடுகளுக்கு ஒரு சவாலாகும்.
2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி வசதிகளைக் கொண்டு இலங்கையின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு பிரதான நோக்கமாகும் என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அங்கு மேலும் கூறியுள்ளார்.