தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா மணப்பெண்ணை தேர்வு செய்ய முடியாது என்று மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மணப்பெண்ணை தேர்வு செய்ய முடிவு செய்து தன்னை மணக்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனர். அதில் இருந்து 16 பேரை தேர்வு செய்து நேர்காணல் நடத்தி வந்தார்.
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு பெண்ணாக வெளியேற்றப்பட்டு சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகிய 3 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் இருந்து ஒருவரை ஆர்யா மணப்பெண்ணாக தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
மூன்று பேருமே மணக்கோலத்தில் வந்து இருந்தனர். ஆனால் யாரையும் மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்யவில்லை.
ஒருவரை தேர்வு செய்தால், மற்ற 2 பெண்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மனம் புண்படுவார்கள். எனவே இந்த மேடையில் என்னால் மணப்பெண்ணை தேர்வு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.