இன்று(26) காலை பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பேரூந்து புகையிரதத்துடன் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரயில், பள்ளி வாகனம் மீது மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. விஷ்ணுபுரா காவல் சரகத்திற்கு உட்பட்ட துதி பகுதியிலேயே குறித்த இந்த விபத்து நடந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து, மிகவும் துரதிஷ்டவசமானது என்றும், காயம் அடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றும் தெரிவித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநத், விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.