காலி மாவட்டத்தில் ஏற்படக் கூடிய எந்தவொரு வௌ்ள நிலைமையின் போதும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடக்கூடிய வகையில் மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லெப்டிணன்ட் கேணல் தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் குறிப்பாக பத்தேகம, பெந்தோட்டை, எல்பிட்டிய, ஹபராதுவ, இமதுவ, கரந்தெணிய, நெளுவை, நாகொடை, நியாகம, தவலம, வெலிவிட்டிய, திவிதுர, யக்கலமுல்ல போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த காலங்களில் வௌ்ளம் பெரும் அனர்த்தங்களை விளைவித்திருந்ததால், இம்முறை குறித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதனை எதிர்நோக்கும் வகையில் மீட்புப் படகுகள், உயிர்காப்பு அங்கிகள் போன்றவை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வௌ்ள அனர்த்தங்களின் போது இடம்பெயரும் பொதுமக்களை தங்கவைப்பதற்கு ஏதுவாக பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் இரண்டு தற்காலிக தங்குமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனர்த்த மீட்புப் பணிகளுக்காக வழமை போன்று தொண்டர்களும் கடற்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.