கொழும்பு-07, சுதந்திர சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்டடத்தின் ஒரு பகுதி, தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதென கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த இந்தக் கட்டடம், இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் அடித்தள பகுதியே இவ்வாறு தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதெனவும் அந்தப் பகுதியில் பல பிளவுகள், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளனவெனவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர், அதனை நினைவு கூர்ந்து, சுதந்திரக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளத்தை, அன்றைய பிரதமர் டீ.எஸ்.சேனாநாயக்க, 1949 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று மேற்கொண்டிருந்தார். அந்தக் கட்டடம், 1953 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது.
10,000 அடி விசாலமான இந்த கட்டடத்தின் கீழ், கீழ்மாடி ஒன்றும் உள்ளது. அதில், 108 தரைகீழ் அறைகளும் உள்ளன. இந்தக் கட்டடம் தாழிறங்குவது தொடர்பில், ஆராய்ந்து அறிக்கையிடுமாறு, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.