அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வெப்பமண்டல புயல் காரணமாக அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தற்போது ஆல்பர்டோ என்ற சூறாவளி புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. பனாமா நகரத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் கடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்டோ புயல் வடக்கு நோக்கி நகரும்போது வலுவடைந்து வருவதாகவும், வெள்ள அபாயம் ஏற்பட உள்ளதாகவும் மியாமி புயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலின் மூலம் மேற்கு ஜியார்ஜியா பகுதிகளில் சுமார் 30 செ.மீ அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் 60 முதல் 120 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.