ஒரு மாத காலத்திற்கு பேஸ்புக் சேவைக்கு தடை…

பப்புவா நியூகினியாவில் பேஸ்புக் சேவைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலியான முகப்புத்தக கணக்கு மற்றும் போலியான செய்திகளை வெளியிடும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்திற்கு இடை நிறுத்துவதற்கு பப்புவா நியூகினியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாளாந்தம் அதிகரித்து வரும் இவ்வாறான சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் சேம்பெசில் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தடை செய்யப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் போலி கணக்கு வைத்திருப்போர், ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், தவறான தகவல்களை பரப்புவோர் கண்டறியப்பட்டு, போலி தகவல்கள் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள சைபர் குற்றச்சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறிய நபர்கள் யார் என்பதை இந்த மாதத்தில் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பப்புவா நியூகினியா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இணையத்தளம் ஊடாக போலியான விடயங்களையும், செய்திகளையும் வெளியிடுவதை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் தற்போது இருந்தே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.