முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளில் இருந்து மேலும் இரண்டு நீதியரசர்கள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தம்மை கைது செய்வதை தடுக்க கோரியும், நிதி மோசடி விசாரணைக் காவற்துறைப் பிரிவு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யக் கோரியும் கோட்டாபய ராஜபக்ஷ அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த இந்த மனு நேற்று(31) நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித் மாலகொட மற்றும் முர்து என்.பி.ஃபெர்ணாண்டோ ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த வழக்கினை எதிர்வரும் நவம்பர் வரையில் ஒத்திவைத்த நீதிமன்றம், அடுத்த வழக்கினை நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து என்.பி.ஃபெர்ணாண்டோ ஆகியோர் உள்ளடங்கும் குழுவிற்கு பட்டியப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் ஒப்டோபர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதியரசர் ஈவா வனசுந்தர வழக்கில் இருந்து வெளியேறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.