புமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் 3 ட்ரில்லியன் டன் பனி உருகியுள்ளது.
அதனால் கடல் மட்டம் உயருவதற்கும் கடற்கரையோர சமூகங்கள் பாதிக்கப்படுவதற்குமான ஆபத்து அதிகரித்துவருவதாக 84 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உருகிய 3 ட்ரில்லியன் டன் பனியின், ஐந்தில் இருமடங்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உருகியுள்ளது. இது உலக வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த விடுக்கப்பட்டுள்ள மற்றுமொறு எச்சரிக்கை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகிவந்தது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 219 பில்லியன் என உருகும் பனியின் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு இதே நிலையில் நீடிக்கும் பட்சத்தில் இந்த நூற்றாண்டு முடிவில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.
அண்டார்டிகாவில் இருக்கின்ற மொத்த பனியும் உருகினால் கடல்மட்டத்தின் அளவு 60 மீட்டர்(210 அடி) வரை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.