ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகினாலும் அமெரிக்க நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் உறுதியளித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியமை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு 30ஃ1 பிரேரணை மற்றும் 2017ஆம் ஆண்டு 34ஃ1 பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்தப் பிரேரணைகளுக்கு அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களை சந்தித்த அவர்,இந்த உறுதிமொழியை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார் என்றும் கூறினார்.
இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்க விலகியது. அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா வழங்கியிருக்கும் அர்ப்பணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.