இனியும் சாதிக்க எதுவுமில்லை – ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இனி சாதிக்க எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பிரிட்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம், உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் போராடி தோல்வியைத் தழுவினார்.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் ஜோகோவிச்சிடம் வெற்றியைப் பறிகொடுத்தார் ஃபெடரர்.

இம்முறை அதற்கு பதிலடி கொடுத்து, 8-ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி, புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் இரண்டு செட்களிலும் சரிக்கு சமமாக சவால் அளித்தவர், அடுத்த இரண்டு செட்களையும் எளிதில் இழந்தார். இதனால் 7-6 (7/1), 6-7 (10/12), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் மீண்டும் வென்றார்.
ஆட்டத்துக்குப் பின்னர் ஃபெடரர் கூறுகையில்;
‘‘உலகத்தின் முதல் நிலை வீரரிடம் தோல்வியடைந்துள்ளேன். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் சில தருணங்களில் ஜோகோவிச்சை நான் தோற்கடித்தேன். இந்த வாய்ப்பை பெற்றவர்களில் நானும் ஒருவன்.

எனக்கு தகுந்தபடி நான் விளையாடினேன். எல்லாம் சரியாக இருந்தது. சிறந்த ஆட்டத்தில் விளையாடியதாக உணர்கிறேன். வெற்றி பெற்றால்தான் சிறப்பான ஆட்டம் என்பது கிடையாது. ஏற்கெனவே விம்பிள்டன்னில் வெற்றி பெற்றிருக்கிறேன். எனவே இங்கு இனி சாதிக்க எனக்கு எதுவும் கிடையாது” என்றார்.
(riz)