டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை கைது செய்து தடுப்பு மையங்களில் அடைக்கும்போது, அவர்களது குழந்தைகள் பிரிக்கப்பட்டு, தனியாக சிறப்பு மையங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

டிரம்ப் அரசின் இந்த மனிதாபிமானமற்ற அகதிகள் கொள்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அரசின் அகதிகள் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன. வெள்ளை மாளிகை அருகே நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான போராட்டங்கள் ஜனநாயக கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தலைமையில் நடைபெற்றது. வாஷிங்டனில் நடந்த பிரதான பேரணியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

டிரம்பின் அகதிகள் கொள்கை மனிதாபிமானமற்றது என்றும், சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்களிடம் இருந்து எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பிரிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.