நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தி – அவசர ஊடகவியலாளர் சந்திப்புக்கு சீன தூதரகம் அழைப்பு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு, சீனா நிதி அளித்தது என நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து, கொழும்பில் உள்ள சீன தூதரகம் இன்று(05) அவசர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த இந்த அவசர ஊடகவியலாளர் சந்திப்பிற்கு, கொழும்பில் உள்ள குறிப்பிட்ட சில உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சீனத் தூதரக அதிகாரிகள், தமது தூதரகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசன வசதிகளே இருப்பதால் எல்லா ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டவில்லை என தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சீனாவின் நற்பெயருக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவே, தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த காலங்களில் சீனத் தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புகளில், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.