பெருநாட்டில் 60 நாள் அவசர நிலை பிரகடனம்…

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை மருந்து கடத்தலை தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைந்து, அவர்கள் மூலம் இவை கடத்தப்படுவதால் நாட்டில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால், அதை தடுக்க பெரு நாட்டில் கொலம்பியா எல்லையில் புதுமேயோ பகுதியில் உள்ள அமேஷோனியன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உத்தரவை பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஷ்காரா பிறப்பித்துள்ளார்.

அதை தொடர்ந்து எல்லையில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

இராணுவ வீரர்கள் உதவியுடன் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவலை கண்காணிக்க 5 ஹெலிகாப்டர்கள், 3 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 50 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானோர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.