கிரீஸில் காட்டுத் தீ – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். எனினும் பலர் தீயில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டர்.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.