பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எப்படியான தவறுகள் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த ஜனநாயக தலைவர். இதனால், நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை எந்த தடைகளும் இன்றி வெற்றிகரமாக முன்னோக்கி செல்லும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ யகாகல குளத்தை புனரமைக்கும் பணிகளை நேற்று(26) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;
“..கடந்த ஆட்சியில் பெறப்பட்ட இந்த கடனை செலுத்தி, எதிர்கால சந்ததியினர் உலகத்திற்கு கடனாளி அல்ல என்ற நிலைமையை உருவாக்கும் கடமை எமக்குரியது. அதேபோல் நாட்டை அபிவிருத்தி செய்ய பாரிய வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் செய்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்றவர்கள் எமது அமைச்சுக்களில் அரசியல் ரீதியான தேவையற்ற தலையீடுகளை செய்தனர்.
எனினும் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமது அமைச்சுக்களில் எவ்விதமான தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதில்லை என்பதுடன் அழுத்தங்களை கொடுப்பதில்லை…” என தெரிவித்திருந்தார்.
##riz