வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு ஆதரவாக, “Kerala..Kerala.. Don’t Worry Kerala…’ என அமெரிக்காவில் பாடியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரஹ்மான், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொர்ரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என்று பாடியுள்ளார்.
அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் தெரியவரும், உதவிகள் பெருகும் என்று கூறப்படுகிறது.