வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(23) முதல் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு, வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 40-50Km வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடற்பிராந்தியங்களைப் பொறுத்த வரையில், யாழ். கரையோர கடற்பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். அதேநேரம் காற்று மணித்தியாலத்துக்கு 30-40Km வேகத்தில் புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற் பிராந்தியங்களில் மேற்குத் திசையிலிருந்தும் ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்தும் வீசும்.
சில சமயங்களில் கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 50Km வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.