கடந்த ஆண்டில் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர்களுக்கு இத்தடையுத்தரவு வழங்கப்பட்டதோடு, அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.
அதனையடுத்து, சந்தேகநபர்கள் தலா 100,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
UPDATE 2018/09/10 – @10.02 AM
கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜர்..
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம்(10) விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.