முத்துராஜவலை எரிபொருள் சேமிப்பகத்திற்கு எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் கடற்பரப்பு மாசடைந்துள்ளமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய தொகுதிக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
முத்துராஜவலை எரிபொருள் சேமிப்பகத்திற்கு எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் திக்ஓவிட்ட முதல் பமுனுகம வரையான கடற்கரையில் எரிபொருள் தேங்கியுள்ளது.
எரிபொருள் கசிவால் குறித்த கடற்பகுதியில் தேங்கியுள்ள எரிபொருளை நீக்கும் பணியில் கடற்படையினர் மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபன அதிகாரிகள் உள்ளிட்ட 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாக நேற்று மாலை அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மீண்டும் அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மேலும் இரண்டு நாட்கள் செல்லும் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.