பிரதமர் தலைமையில் எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு நாளை கூடுகிறது…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மாகாண சபைகள் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு அரசியல் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் நாளை(20) பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.

இதன்போது மாகாண சபைகள் எல்லை நிர்ணய அறிக்கை குறித்து கட்சி தலைவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக மாகாண சபைகள் எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குழு கடந்த 07ம் திகதி அலரி மாளிகையில் கூடியிருந்ததுடன், அதன்போது குழுவின் பரிந்துரைகளை விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.