அண்மைக்காலமாக பலதரப்பட்டோரால் தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸாரின் பயிற்சி நிகழ்சித் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இங்கிலாந்துக்குச் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான தகவலை வெளியிட்ட, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார, எதிர்வரும் 30ஆம் திகதி, பொலிஸ்மா அதிபர், இங்கிலாந்துக்குப் பயணமாகவுள்ளார் என உறுதிப்படுத்தியுள்ளார்.
பொலிஸ்மா அதிபரோடு, தானும், சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம். சூரியப்பெரும, பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன ஆகியோரும் செல்லவுள்ளதாகவும், பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால், பயிற்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்தே, இவர்கள் பயணமாகவுள்ளனர்.
பயிற்சிகள் காரணமாக, ஒக்டோபர் 6ஆம் திகதிவரை, அங்கு இவர்கள் தங்கியிருப்பர். சமுதாய பொலிஸ் சேவை, பொலிஸ் மறுசீரமைப்பு ஆகியன தொடர்பாகவே, இந்தப் பயிற்சி அமையவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.