வர்த்தகர் முஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் பிரியந்த ஜயவர்தன முன்னிலையில் இன்று(25) விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
குறித்த மனுவை ஜனவரி 29ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் குழாம் இதன்போது உத்தரவிட்டுள்ளனர்.
வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தமக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் இதன் காரணமாக அந்த குற்றங்களில் இருந்து தம்மை நிபந்தனையற்ற விடுதலை செய்ய உத்தரவிடுமாறு முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமது மேன்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.