இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள போதிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டோனியின் துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை, ஆதலால் ரசிகர்கள் டோனி மீதான எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ண தொடரிலும் டோனி பெரிதாக களத்தில் இருக்கவில்லை, இந்நிலையில், டோனியின் சொதப்பலான துடுப்பாட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில்;
“.. டோனி இப்போது மிகச் சிறந்த உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரராக தெரியவில்லை. கேதர் ஜாதவ் (kedar jadhav), ஆசிய கிண்ண தொடரில் நல்ல நிலையில் இருந்தார். அவரை டோனிக்கு முன்னதாக களமிறக்கி இருக்க வேண்டும்.
ஆனால், டோனியை கேதாருக்கு முன்னதாக துடுப்பாட்டம் செய்ய அனுப்பி சொதப்பியுள்ளனர். டோனி இப்போதிருக்கும் நிலையில் அவர் துடுப்பாட்ட வரிசையில் கீழேயே விளையாட வேண்டும்.
மேலும், ரசிகர்கள் டோனி மீதான எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். இனியும் டோனி சிறப்பாக துடுப்பாட்டம் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’
‘ஒரு கீப்பராக டோனி தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கு, இந்திய அணி கோஹ்லி தலைமையில் செல்ல இருக்கிறது.
கோஹ்லிக்கு பக்கபலமாக அனுபவம் வாய்ந்த டோனி உடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், டோனியின் துடுப்பாட்டம் தொடர்ந்து கவலையளிக்கிறது. இது அணிக்கு பின்னடைவாக அமைந்திடும்.
டோனிக்கு பதிலாக வேறு ஒரு வீரர் இருந்தால், அதனை பி.சி.சி.ஐ பரிசீலிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.