கடந்த 3ஆம் திகதி களுத்துறை – தெபுவன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய, விசேட பொலிஸ் குழுவொன்று இன்று(08) குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான மேவன் த சில்வா தெரிவித்துள்ளார்.
தெபுவன பிரதேசத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் கைது செய்யப்பட்ட மணல் லொறியொன்றை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தமையையடுத்து, குறித்த சார்ஜன்ட் தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டமைத் தொடர்பான விசாரணைகளுக்காகவே, குறித்த குழு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகம் கவனமெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கிய அறிவுறுத்தலுக்கமையவே, பொலிஸ் அத்தியட்சகர் கிங்ஸ்லி குணசேகரவின் தலைமையில் குழு ஒன்று தெபுவன பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.