அம்பேபுஸ்ஸ – இராணுவ முகாமினுள் இராணுவ சிப்பாய் ஒருவரை கொலை செய்து, துப்பாக்கியை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோகந்தர மற்றும் பியகம பகுதிகளில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு சந்தேக நபர் முன்னாள் இராணுவ சிப்பாய் என்பதோடு, மற்றையவர் தற்போதும் இராணுவத்தில் சேவையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமின் இரண்டு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு, இந்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.