ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அறை விவகாரம் – CID விசாரணை…

ஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் , இது தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கு இரகசிய பொலிஸார் நேற்று(09) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு தகவல்கள் எவ்வாறு இணையத்தில் வெளியாகியது என்பது தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் கணனி பிரிவிடம் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா நோக்கி செல்வதற்கு முன்னர், 22ஆம் திகதி இரவு, புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அரசாங்க புலனாய்வு பிரிவிற்கு தகவல் ஒன்று கிடைத்திருந்தது. அத்துடன், ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் தொடர்பான தகவலும், ஜனாதிபதி உட்பட குழுவினர் பயணித்த விமானத்தின் புகைப்படங்கள் உட்பட அனைத்தும் சமூக இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதி தொடர்பான முக்கிய தகவல்கள் எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.