அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் இவற்றை இழந்தேன்…

மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்த அதிதி ராவ், அட்ஜெஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்களை இழந்தேன் என்று கூறியிருக்கிறார்

இயக்குனர் மணிரத்தினம் படங்களான காற்று வெளியிடை மற்றும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ், தான் அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக கூறி மீடூ இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால் வாய்ப்புகள் குறையும். இருப்பினும் என் கொள்கைகளை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை. நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. 3 படவாய்ப்புகள் வந்தும் அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர்.

எனக்கு கண்ணியம், கௌரவம் தான் முக்கியம். அதனால் பட வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை. சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்று பொதுவாக கூற முடியாது. சினிமா துறை மட்டும் அல்ல பிற துறைகளிலும் வித்தியாசமானவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சிலர் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வார்கள். ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் முன்னேறுவது கடினம்.

நான் ஏன் இன்னும் நம்பர் ஒன் நடிகையாகவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. நான் சில பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அதனால் நம்பர் ஒன் ஆக முடியவில்லையே என்ற வருத்தமே இல்லை.

சிலருக்கு அதிகம் சம்பளம் வாங்குவது தான் வெற்றி. சிலருக்கு நிறைய விருதுகள் வாங்குவது வெற்றி. சிலருக்கு அதிக படங்களில் நடிப்பது. ஒரு பெரிய இயக்குனர் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்தால் அதை கௌரவமாக நினைக்கிறேன். அது தான் எனக்கு வெற்றி என்று அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.