உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை தற்பொழுது ஒரு மெற்றிக் டொன் 370 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் உர நிவாரணத்தின் கீழ் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய உர செயலக அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உலக சந்தையில் இராசாயன உரத்தின் விலை அதிகரித்து வருவதுடன், இதன் விலை 63,640 ரூபாவாக நேற்று அதிகரித்துள்ளது.
இது தொடர்பிலும் 2018ம் ஆண்டு பெரும்போகத்தில் தட்டுப்பாடின்று விவசாயிகளுக்கு உரத்தை விநியோகிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் விவசாய அமைச்சர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
உலக சந்தையில் யூரியாவின் விலை அதிகரித்த போதிலும் இலங்கையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துமாறும், மஹிந்த அமரவீர தேசிய உர செயலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைவாக நெல் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா பொதி ஒன்றின் விலை 500 ரூபாவுக்கு ஏனைய உற்பத்தி பயிர்களுக்கான யூரியா பொதி ஒன்று 1500 ரூபாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பெரும் போக உற்பத்திக்காக சுமார் 8 இலட்ச ஏக்கர் நெற்காணி பயன்படுத்தவுள்ளது. இதற்கு தேவையான உரம் 2,65,000 மெற்றிக் டொன் ஆகும்.