தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். எதிர்வரும் நவம்பர் 6ம் திகதிக்குள் பொருத்த வேண்டும். கேமரா மூலம் அனைத்து சம்பவங்களும் 24 மணி நேரமும் பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 15ம் திகதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு படங்கள் திரையிட கொடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் திரையரங்கிற்குள் அனைத்து காட்சிகளிலும் 2 நபர்கள் முழுநேர கண்காணிப்பு பணியில் அமர்த்தப்படுவர் எனவும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்து செயல்படும் வகையில் ஒரு குழு அமைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.