தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று(25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த மாணவர்களை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகிடிவதையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள வகுப்புத்தடையை நீக்குமாறு கோரி, அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாகக் கட்டடத்தினை ஆக்கிரமித்திருந்தனர். இதனால் பல்கலைக்கழக நிருவாக செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிருவாகத்தினரால் அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.