பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் தலைமையில் 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 13 ஆம் திகதி பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 7 ஆம் திகதி வரை குறித்த வர்த்தமானி அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதற்கமைய மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.