கோட்டாபயவின் வழக்கினை தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுக்க கொழும்பு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.