வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு 02 முக்கிய செயற்திட்டங்கள்…

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(12) இடம்பெற்ற வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

வட மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய பாரிய கால்வாய்த்திட்டம், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள “யாழ்ப்பாணத்திற்கு நீர்” செயற்திட்டம் ஆகியன தொடர்பாகவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜயிக்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் “எல்லங்கா” குளக் கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மஹாவலி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(iFA)