(FASTNEWS|COLOMBO) நாடு முழுவதிலும் எதிர்வரும் தினங்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ளதனால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை எதிர்க்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் உள்ள மாவட்டங்களில் அனர்த்தத்தை எதிர்க்கொள்வதற்காக தேவையான உபகரணங்கள் மாவட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இடர் அனரத்த சந்தர்ப்பத்தின் போது உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக முப்படை மற்றும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஏதேனும் பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்காக முப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட குழுவை தொடர்புபடுத்துவதற்காக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு 24 மணித்தியாலமும் செயற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.