15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்க நடவடிக்கை

(FASTNEWS|COLOMBO)- அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த 15 பேரின் மரபணு பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) நீதிமன்றம் மற்றும் குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டதை அடுத்து, குண்டைவெடிக்கச் செய்தமையை தொடர்ந்து குறித்த வீட்டிலிருந்த 15 பேர் உயிரிழந்தனர்.

அதேவேளை, குறித்த இடத்திலிருந்து குழந்தைகள் ஆறு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

பின்னர் மரபணு பரிசோதனைக்காக அவர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டன. எனினும் அவை பழுதடைந்திருந்ததன் காரணமாக கடந்த 7ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அம்பாறை பிராத நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் சடலங்கள் மீண்டும்தோண்டி எடுக்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.