(FASTNEWS | COLOMBO) – அமெரிக்காவில் இன்று(04) சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் அதனை இலக்கு வைத்து வெள்ளையின மேலாதிக்கவாத குழுவினரும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கக்கூடிய அபாயம் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. (FBI), பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய தீவிரவாத முறியடிப்பு நிலையம் என்பன எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிப்படும் பாரிய தீச்சுவாலை முன்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்பதை போலியாக வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்தத் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் நியூயோர்க்கில் மான்ஹெட்டன் பாலத்திற்கு அருகிலுள்ள வீதியில் விமானமொன்று விழுந்து நொறுங்குவதையும் படைவீரர் ஒருவர் அச்சத்துடன் ஓடுவதையும் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட மற்றைய புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தயாராக செம்மஞ்சள் ஆடை அணிந்து தீவிரவாதிகளின் முன்பாக தரையில் மண்டியிட்டிருப்பதாக தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட சுவரொட்டியொன்றில் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.