களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்வெட்டு

(FASTNEWS|COLOMBO) – களுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்கத்தில் இடம்பெறும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று(09) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு கட்டுகுருந்த மற்றும் நாகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நகரின் அபிவிருத்தி திட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை(10) காலை 9 மணி முதல் நாளை மறுதினம்(11) காலை 09 மணிவரை 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவள மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிக்காவத்த, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள்,இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்ததுடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஹோக்கந்தர பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.