(FASTGOSSIP | COLOMBO) – வெளிநாட்டவர்கள் ஒரு போதும் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று யாழில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த இந்நிலையில் இது குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அதனை மறுத்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்தில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய போதும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், அது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதோடு, வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என்பதை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புவதாகவும், இந்த விடயத்தினை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.