(FASTNEWS | COLOMBO) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக தெரிவித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு உச்ச நீதிமன்றத்தினால் செப்டம்பர் 10ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புவனெக அளுவிஹாரே, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு இன்று(11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 ஆண்டுகளில் நிறைவடையும் விதமாக 19 வருட சிறைத் தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவ்வாறு மிகவும் பாரிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய குறித்த மனுவில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.