தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம்

(FASTNEWS|COLOMBO) – தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் நாளை(31) முதல் 3 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவும் டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளது என்று தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கலாக 40 சுகாதார வைத்திய பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக சமூக சுகாதார குழுக்களுக்கு தொண்டர் அமைப்புக்கள், இத்துறையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள நாட்டின் அனைத்து பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை இணைப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் ஆகஸ்ட் மாதம் 2ஆம் 3ஆம் 4 ஆம் திகதிகளில் புகை விசிறல் மற்றும் பாடசாலைகளை பரிசோதிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் இடம்பெறவுள்ளன.