(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மறைந்த முல்லைத்தீவு, கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை விகாரைக்கு முன்னதாக உள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும் சிலர் நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது
வழக்கு மீதான விசாரணை சில நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
—————————————————————————————————— UPDATE @01:00PM
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், 15 நிமிடங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்யவோ, புதைக்கவோ கூடாதென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சுதர்ஷன் இடைக்காலத் தடைவிதித்திருந்தார்.
அத்துடன், தேரரின் பூதவுடல் தொடர்பிலான இறுதிக் கிரியைகள் குறித்த, இறுதித் தீர்மானம் இன்றுக் அறிவிக்கப்படுமென முல்லைத்தீவு பொலிஸாருக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விஹாரை தரப்பினரையும் கோவில் நிர்வாகனத்தினரையும் ஆஜராகுமாறும், நீதிமன்றம் கட்டளையொன்றை பிறப்பிக்குமென பதில் நீதவான் உத்தரவிட்டடிருந்தார்.
மறைந்த தேரரின் சடலத்தை, முல்லைத்தீவு நீராவியடிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள், நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் சனிக்கிழமை (21) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
தேரரின் பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலை அண்மித்த பகுதியில் அடக்கம் செய்வது, இந்து மதத்தை அவமதிக்கும் செயலென, பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாடு தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸார், சனிக்கிழமை இரவு, முல்லைத்தீவு மேலதிக நீதவானின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.
இதையடுத்து, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கு, இடைக்காலத் தடைவிதித்த பதில் நீதவான், இன்று (23) இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படுமென்றும், சடலத்தை அங்கு கொண்டுசென்று, அஞ்சலி செலுத்துவதைத் தடை செய்ய முடியாதென்றும் தீர்ப்பளித்தார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, தேரரின் பூதவுடலை, கோவில் வளாகத்தில் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டாம்” என, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணித்திருந்தார்.
நீராவியடி குருகந்த ராஜமஹா விகாரையில், தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.