(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருதுக்கு போட்டியில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பானுக்க ராஜபக்ஸ, முதல் போட்டியில் 35 ஓட்டங்களையும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அபாரமாக ஆடி 77 ஓட்டங்களையும் குவித்து அசத்தியிருந்தார்.
தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.
இலங்கை தேசிய அணிக்காக விளையாடுவதற்கு சுமார் 10 வருடங்கள் காத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் புதுமுக வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதேபோன்று, பயிற்சியாளர்கள் கொடுத்த தன்னம்பிக்கை இந்த இடத்துக்கு வருவதற்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நேற்று பெற்ற ஓட்டம், பாகிஸ்தான் அணிக்கெதிராக இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச இருபதுக்கு 20 ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
“சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ள 10 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் எனது கடவுளை நம்புகிறேன். எனவே, கடவுளின் ஆசிர்வாதத்தினால் தான் சரியான நேரத்தில் வாய்பினைப் பெற்றுக் கொண்டேன். பாடசாலைக் காலம் முதல் இன்று வரை இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய பேர் எனக்கு உதவி செய்துள்ளனர்.
அதேபோல, உலகின் முதல்நிலை இருபதுக்கு 20 அணியை வீழ்த்தியது மிகப் பெரிய அனுபவத்தையும் கொடுத்திருந்ததது. உண்மையில் ஒரு அணியாக மாத்திரமல்லாது முழு நாடுமே இந்த வெற்றி குறித்து பெருமையடையும் என நான் நம்புகிறேன்
இலங்கை அணிக்குள் இடம்பெறுவதற்கு கடுமையான போட்டி நிலவியது. அதற்காக பலர் தேவையற்ற விடயங்களைத் தெரிவித்தனர். ஆனால், அவற்றை நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை. எனது வழமையான துடுப்பாட்டத்தை தான் உள்ளூர் போட்டிகளிலும் வெளிப்படுத்தியிருந்தேன்.” என தெரிவித்தார்.