இலங்கை தூதரகத்தை தாக்க திட்டம்; புலிகளுடன் தொடர்பா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை அந்நாட்டுக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் தடை நீடித்து வருவதாகவும் மலேசிய காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

குறித்த கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மலேசிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ அயோப் கான்,

கைதாகியுள்ள ஏழு பேரும் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, நிதி திரட்டியதாக பொலிஸார் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைதானவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார்.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைதாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.