(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விளக்கமளித்தார்.
சங்கைக்குரிய தேரர், அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலையடைவதாக தெரிவித்தார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளின் தலைவனாக கூறப்படும் சஹ்ரான் மற்றும் அவனது சகோதரனை நான் சந்தித்ததாக பழைய புகைப்படங்களை வைத்து எனக்கும் பயங்கரவாதத்துடன் சம்பந்தம் இருப்பதாக குறிப்பிட்டு தீயசக்திகள் விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
அப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் தனக்கு இருக்கின்ற நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் பரப்பப்படுகின்றன.
ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெறும் அதில் என்மீது கேள்வியெழுப்பப்பட்டால், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயாராகவுள்ளேன்.
எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரசாரம் பொய் என்பதையும் நான் நிரபராதி என்பதையும் நிரூபிப்பேன். இந்த சதி முயற்சியை யார் வெளிப்படுத்தினார்கள், அவர்களின் பின்னாலுள்ள சக்தி, அவர்களின் பின்னணி குறித்து நான் விளக்கமளிப்பேன் என தெரிவித்தார்.