ஈரானில் சுமார் 90 சிறுவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாக ஐ,நா அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரான் கடந்த ஆண்டு மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சர்வதேச மனித உரிமை சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை மீறி ஈரான் கடந்த ஆண்டு மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் தூக்கில்போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

ஐ.நா. சபைக்கான ஈரானின் மனித உரிமை விசாரணையாளர் ஜாவீத் ரஹ்மான், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்த தகவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இது நம்பகமான தகவல். ஈரானில் தற்போது சுமார் 90 சிறுவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். உலக நாடுகளில் ஈரானில்தான் மரண தண்டனைகள் அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன” என்றார்.

ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகங்கள் கண்டுகொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.