அரசுக்கு மாலை 6 மணி வரைக்கும் ரஞ்சன் கால அவகாசம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலை பேரூந்தில் இன்றும்(22) பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் பாராளுமன்றில் விசேட உரை ஆற்றுவதற்கு முயன்ற போதிலும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அவருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில், அவர் கருத்துரைக்கையில், ஒரு இலட்சத்து இருபதாயிரம் குரல் பதிவுகள் என்னிடம் இருந்து பொலிசார் பறிமுதல் செய்தனர். அதனை அவர்கள் ஊடகங்களுக்கும் வழங்கியுள்ளனர்.

“.. என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் என்னுடைய கைப்பேசிகள் 4,  வன் வட்டுக்கள் (Hard Disk) 8, மடிக்கணணி ஆகியவற்றை கைப்பற்றினார்.

எனினும், நான் எனது குரல்பதிவுகள் மற்றும் பெறுமதிமிக்க சான்றுகளை ஒரு வங்கியின் லொக்கரில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். நான் சிறையில் உள்ளதால் எனக்கு வெளியே செல்ல முடியாது. என்னுடைய செயலாளருக்கு சொல்லி உள்ளேன். ராஜபக்ஷ ரெஜிமென்டுகள் உலா வருகின்றனர். அதனால் அவற்றை உரிய நேரத்தில் பிரதியெடுக்க முடியவில்லை.

என்றாலும் நான் இன்றைய தினத்தினுள் அரசுக்கு எதிரான குரல் பதிவுகள் சிலவற்றினை மாலை 06 மணிக்கு முன்னர் ஒப்படைக்கிறேன்…” எனத் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் மறைக்கும் உரையாடல்களும் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அலோசியஸ் தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகளும் இருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குரல் பதிவுகளும் தன்னிடம் இருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய(21) தினம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.