தொலைக்காட்சி, வானொலி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் விநியோகித்தலை முறையாக மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரையில் 27 தனியார் வானொலி ஒலிபரப்பு அனுமதி பத்திரம், மற்றும் 54 தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள்; வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் 18 வானொலி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 28 தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி பத்திரங்கள் மாத்திரம் தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகின்றன.
இந்த அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கான நடைமுறை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வானொலி மற்றும் தொலைக்காட்சி என்ற ஊடகங்களில் இரண்டு வகைகளில் பணியாற்றுகின்றமையால் இதற்காக தனியான நிறுவனமொன்று இருப்பதன் தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு அதற்காக ஒளிபரப்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு என்ற பெயரில் திருத்த சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுப்பதற்காக 1966ஆம் ஆண்டு இல 37 இன் கீழான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டு இல 6 இன் கீழான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சட்டத்தின் மானியத்திற்கு அமைவாக தற்பொழுது தனியார் வானொலி ஒலிபரப்பிற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது.