மக்காவில் ஏற்பட்ட அனர்த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்த நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன் என்கின்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது பேஸ்புக் பதிவில், மக்காவில் அண்மையில் நடந்த விபத்தில் முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை வரவேற்று மகிழ்ச்சியடைவதாக கருத்து பதிவு செய்திருந்தார்.
இதை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம் பேஸ்புக் பயனாளிகள் பார்த்து, அந்த தகவலை, திருமங்கலத்திலுள்ள முஸ்லிம்களுக்கு தெரிவித்துள்ளனர்.
திருமங்கலத்தை சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர், பேஸ்புக் பதிவு குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளபொலிஸார், வேல்முருகனை கைது செய்து, அவருக்கெதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணையின்போது வேல்முருகன் தகவல் தொழில்நுட்ப பாடத்தில் இளநிலை பட்டம் பயின்றவர் என்பதும், திருமங்கலத்தில் கணினி நிலையம் நடத்திவருபவர் என்பதும் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குறிய அந்த பேஸ்புக் கருத்து அவரது பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி, தமிழக பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயற்குழு உறுப்பினர் பதவியை அக்கட்சி இவருக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.