அம்பலத்தில் ஆட ஞானசார தேரர் ரெடி : சிறுபான்மை விதிகள் சதிகளில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஞானசார தேரரை தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளதாக எங்கள் மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் சமன் பெரேரா தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் ஞானசார தேரரின் பெயர் உத்தியோகபூர்வமாக முன்மொழியப்பட்டிருந்தது.

‘எங்கள் மக்கள் சக்தி’ கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ள போதிலும் இதில் சட்டச் சிக்கல் உள்ளதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களும் தேர்தலில் போட்டியிட முன்னர் தேசிய பட்டியலில் பெயர் குறிக்கப்பட்டவர்களும் மாத்திரமே தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கட்சியின் செயற்குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளோம். காணப்படும் சட்டச்சிக்கலை முறையாக வெற்றி கொண்டு ஞானசார தேரரை நிச்சயம் பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். அத்துரலியே ரத்ன தேரர், எங்கள் மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மாத்திரமே. தேசியப் பட்டியல் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரருக்கு தேசிய பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை வழங்கவே தீர்மானித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அண்மைக்காலமாக ஞானசார தேரர் சிறுபான்மை மக்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சுக்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கியுள்ளமை சர்ச்சையாகவுள்ளமையும் சுட்டிக்கட்டத்தக்கது.

‘எங்கள் மக்கள் சக்தி’ கட்சியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட ஞானசார தேரர் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது